Thursday, November 3, 2011

கேட்க கூடாத கேள்விகள்

சாப்ட்வேர் என்ஜினியர்:
தான் செய்த தவறை திருத்தம் செய்ய கூட client-யிடமிருந்து பணம் வசூலிப்பது ஏன்?

சினிமா நடிகர்கள்:
சண்டைக் காட்சிகளில் டூப் போடும் நடிகர்கள், நெருக்கமான காட்சிகளில் நடிக்க தயக்கம் காட்டாதது ஏன்?

போலிஸ்:

இதுவரை வந்த 50 சதவீதம் படங்களில் உங்கள் துறையை கிண்டல் செய்த பின்னரும் நீங்கள் கோபப்படாதது ஏன்?

அரசு ஊழியர்:
அரசாங்க உத்தியோகம் வாங்க காட்டும் ஆர்வத்தில் 10 சதவீதம் கூட உங்கள் உழைப்பில் தெரியாதது ஏன்?

மார்க்கெட்டிங் மேனேஜர்:

அயல் நாட்டு பொருட்களை வியாபாரம் செய்ய தெரிந்த உங்களுக்கு நம் நாட்டு விவசாயிகள் கண்ணுக்கு தெரியாமல் போனது எப்படி?

வாக்காளர்கள்/மக்கள்:
தங்களது 5 வருட வாழ்க்கையை வெறும் 500 ரூபாய்க்கு அடமானம் வைக்க பழகிக் கொண்டது எப்படி?

அரசியல்வாதி:

"அரசியல்" என்ற வார்த்தையின் அர்த்தமே தெரியாமல் வாழ்வது ஏன்?

Thursday, October 27, 2011

உள்ளாட்சி தேர்தலும் ஊர் குடிமகன்களும்



எங்கள் ஊர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இந்த வருட உள்ளாட்சி தேர்தல் "30 நாள்" திருவிழா போல் நடந்து முடிந்திருக்கிறது.

ஒரு சட்டமன்ற உறுப்பினரால் தன்னைச் சார்ந்த தொகுதி ஊர்கள் அனைத்திற்கும் நேரடியாக பணியாற்ற முடியாத காரணத்தினால் ஒவ்வொரு ஊராட்சிக்கும்/பேரூராட்சிக்கும்/நகராட்சிக்கும்/மாநகராட்சிக்கும் அரசு திட்டங்கள் உடனடியாகவும், எந்த ஒரு குறை இல்லாமலும் சென்றடைய தலைவர்களையும்/செயற்குழு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க நடத்தப்படுவது தான் உள்ளாட்சி தேர்தல்.ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு ஊராட்சி தலைவரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தல் மக்களிடையே கருத்து வேறுபாட்டையும்,வன்முறையையும், ஒற்றுமையை சீர்குலைக்கவும் நடத்தப்படும் ஒரு சண்டை களமாகவே நடந்தேறுகிறது.

ஒரு கிராமத்தில் அனைவருமே ஒருவருக்கொருவர் ஏதாவது ஒரு வகையில் சொந்தம் என்றவொறு சங்கிலியால் பின்னப்பட்டிருப்பர்.இதில் தலைவராக போட்டியிடும் வேட்பாளர்கள் எல்லோரும் அனைவருக்கும் வேண்டப்பட்டவராகவே இருப்பர்.எனவே ஒவ்வொருவருக்கும் தனக்கு விருப்பப்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க உரிமை உள்ள நிலையில், பிரிவினையை தூண்டும் விதமாக சிலர் செயல்பட்டு ஊரின் ஒற்றுமைக்கு உலை வைத்து விடுகின்றனர்.

ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் பின்வரும் எதோ காரணங்கள் தான் உந்துதலாக இருக்க வேண்டும்.
1) ஊருக்கு நன்கு அறிமுகமானவர்
2) எல்லோருடனும் எளிதாக பழகக் கூடியவர்
3) பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்
4) ஊருக்கு தீங்கு நினைக்காதவர்
5) நல்ல ஒழுக்கம் உள்ளவர்

இதை எல்லாம் விட்டு விட்டு இவர் நம் வர்க்கத்தைச் சேர்ந்தவர்/இவர் நம் தெருவைச் சேர்ந்தவர்/இவர் நம் இனத்தைச் சேர்ந்தவர் என்று ஒரு கூட்டு அமைத்துக் கொண்டு பண பலம் மற்றும் ஆட்கள் பலத்தினால் தேர்ந்தெடுக்கப் படும் ஒரு தலைவர் எல்லோருக்கும் நன்மைகள் செய்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.இப்படி தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவர் எப்படி பாரபட்சமின்றி செயல்படுவார்.அடுத்த கோஷ்டியினரை எதிரியாகவே பார்க்க தோணும்.

இந்த வருட தேர்தலில் நடந்தேறிய சில மறக்க முடியாத கூத்துக்கள்
1) பிராந்தி பாட்டில்களே ஓட்டு வாங்கும் ஒரு முக்கிய அங்கமாய் வகித்தது.தன் குடும்பத்தாராலே கூட மதிக்கப் படாத பல குடிமகன்கள் எதிர்கால ஊராட்சி மன்ற தலைவரால் மரியாதையுடன் பாட்டில்கள் கொடுத்து கவுரவிக்கப்பட்டனர்.இதில் வேட்பாளர்கள் மறந்து போன 2 விஷயம், a)குடிமகன்களின் வீட்டு ஓட்டுகள் அவர்களுக்கு கிடைக்காது(ஏனென்றால் குடித்து விட்டு வந்து வீட்டில் செய்யும் ரகளையால் வேட்பாளரின் மேல் கோபமே ஏற்படும்). b) 29 நாட்கள் பாட்டிலைப் பெற்றுக் கொண்டு ஒரு நாள் பாட்டில் கொடுக்க மறந்திருந்தால் குடிமகன் ஓட்டை மாற்று வேட்பாளருக்கு போடுவான் என்று தெரியாதது.
2) ஒருவர் கூட தங்கள் அடுத்த ஐந்து வருட திட்டங்கள் பற்றி வாய் திறக்காதது(திறந்திருந்தாலும் அவர்கள் செய்த செலவு அவர்களை செய்ய விட்டிருக்காது)
3) ஊருக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது
4) ஏழ்மையான ஒரு நல்ல மனிதர் இனி தேர்தலில் நிற்க முடியாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது
5) தலைவன் என்ற பதவிக்காக இருக்கிற மானம், மரியாதை எல்லாம் இழப்பது.
6) ஓட்டை பணத்திற்கு விற்கும் நிலையை ஏற்படுத்தியது.

ஊரை ஒருங்கிணைத்து செல்லவும், நல்ல திட்டங்கள் மக்களை சென்றடையவும் தான் தலைவனை தேர்ந்தெடுக்க வேண்டும்.பதவி சுகத்துக்காக அலைபவர்களை அல்ல.நல்லது செய்ய பதவி தேவை இல்லை, நல்ல மனசு இருந்தால் போதும்.

மொத்தத்தில் குடிமகன்களின் கோலாகல விழாவாகவே அமைந்தது இந்த உள்ளாட்சி தேர்தல்

வெளிச்சம் - மகளிர் சுய உதவிக் குழு





இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று சொல்லுமளவுக்கு தமிழ்நாட்டில் வெற்றியடைந்த ஒரு திட்டம் தான் "மகளிர் சுய உதவிக் குழு".

12-20 பெண்கள் ஒரு குழுவாக சேர்ந்து மாதம் 100 ரூபாய் செலுத்தி கூட்டுத் தொகையை ஒரு வங்கி கணக்கில் டெபாசிட் செய்வர்.பின்னர் குழுவில் உள்ள எவருக்கேனும் பண உதவி தேவைப்பட்டால் வங்கியிலிருந்து எடுத்து பகிர்ந்து கொள்வது.பின்னர் மாதா மாதம்பெற்ற கடனின் ஒரு பகுதியுடன் நிலுவையில் இருக்கும் கடன் தொகையின் வட்டியையும் சேர்த்து கட்ட வேண்டும்.எடுத்த தொகையை குறைந்தது 5 மாதத்திற்குள் செலுத்தி விட வேண்டும்.

படிக்காத கிராமத்து பெண்களை தங்கள் சொந்தக் காலில் நிற்க வைத்த ஒரு அருமையான திட்டம்.அது மட்டுமின்றி பல ஆண்களே "ஆடவர் சுய உதவி குழு" என்று தோற்றுவிக்குமளவிற்கு வெற்றியடைந்த திட்டம்.

இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
1) சேமிப்பு
2) அவசர பண உதவி
3) ஒற்றுமை
4) பிறரின் கஷ்டத்தில் பங்கு கொள்ள தூண்டுதல்
5) வட்டிப் பணம் நமக்கே ஒரு சேமிப்பாய் வளருதல்
6) கடன் வாங்கியோர் முழுமையாக செலுத்திய பின்னரே அடுத்த் கடன் பெற தகுதியானவர் என்பதால் ஒருவருக்கே பணம் சேருவதை தடுத்தல்.
7) அரசு வழங்கும் குறைந்த வட்டி விகித கடன்.
8) பெற்ற கடனை குறித்த காலத்தில் செலுத்த தூண்டுதல்.

இப்படி பல நல்ல அம்சங்கள் இருந்தும் சில விஷமிகள் இந்த திட்டத்தை தவறான வழியில் பயன்படுத்தியும் வருகின்றனர்.
1) குழுவில் யாருக்கும் பண உதவி தேவைப்படாத பொழுது, குழுவில் இல்லாத வெளி நபருக்கு அதிக வட்டி விகிதத்தில் கடன் கொடுத்து வசூலித்து விட்டு குழுவின் வட்டி விகித அளவில் கணக்கு காட்டும் குழு தலைவிகள்.
2) இன்னும் சில பேர் குழு சேர்த்து விட்டு 2 மாதத்தில் தலைமறைவு ஆகி விடுவது(சில நேரங்களில் வெளியூர் படித்த பெண்கள் குழு தலைவியாக பொறுப்பேற்க வாய்ப்பு உண்டு).எனவே அறிமுகம் இல்லாத நபரை குழு தலைவியாக நியமிப்பதில் எச்சரிக்கை தேவை.

நல்ல திட்டங்களை அறிமுகப் படுத்தவும் அதை கொஞ்சம் தூரத்தில் இருந்து கவனிக்கவும் மட்டும் தான் அரசால் முடியும்.அதை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நாம் தான் செயல்படுத்த வேண்டும்.

Thursday, October 20, 2011

ஆமை அரசாங்கமும் ஊமை மக்களும்

அரசு பள்ளியில் ஒரு மதிய வேளையில்,
ஆசிரியர்:"டேய் முத்து,சிவா,பிரபு உங்களுக்கு ஸ்காலர்ஷிப் வந்திருக்கு பணம் வாங்கணும்னா சாதிச்சான்று மற்றும் வருமானச்சான்று ரெண்டையும் இன்னும் ஒரு வாரத்துல ஆபிஸ் ரூம்ல கொடுத்துருங்க"

முத்துவின் வீட்டில்,
முத்து: "அப்பா, எங்க ஸ்கூல்ல எனக்கு ஸ்காலர்ஷிப் தர்றாங்கப்பா, அதுக்கு சாதிச்சான்று மற்றும் வருமானச்சான்று ரெண்டும் வேணுமாம்.நாளைக்கு போயி வாங்கிட்டு வந்து கொடுப்பா"
முத்துவின் அப்பா: "இரு இரு இன்னும் ரெண்டு நாள் போகட்டும் நாளை கழிச்சு நடவு வச்சிட்டு நானே ஆள் கிடைக்காம தவிச்சுக்கிட்டு கிடக்கிறேன்"
முத்து:"இல்லப்பா இன்னும் ஒரு வாரத்துல கொடுத்தாகனும் சீக்கிரம் வாங்கி தாங்கப்பா"
முத்துவின் அப்பா: "இந்த வாத்தி பயலுக்கு அறிவே இல்லையா? நடவு வச்சிருக்கிற நேரத்துல அத வாங்கிட்டு வா இத வாங்கிட்டு வா ன்னு உசிர எடுக்கிறான்".

தாசில்தார் அலுவலகத்தில்:
முத்துவின் அப்பா(சாதிச் சான்று விண்ணப்பத்தை நீட்டியவாறு):"எப்போ சார் சர்ட்டிபிகேட் கிடைக்கும்"
அலுவலர்: "இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு வந்து வாங்கிக்குங்க"
முத்துவின் அப்பா: "என்ன சார் சொல்றீங்க.இத கொடுக்க ரெண்டு வாரம் ஆகுமா?. சார் ஸ்கூல்ல இன்னும் ரெண்டு நாள்ல கொடுக்க சொல்லி இருக்காங்க, கொஞ்சம் சீக்கிரம் பாருங்க சார்"

அலுவலர்:" உங்களுக்கு மட்டும் நான் இங்க வேலை பார்க்கல, அங்க எத்தனை மூட்டை ஃபைல் இருக்குன்னு பார்த்தேல்ல. போ போ போயிட்டு 10 நாள் கழிச்சு வா பார்க்கலாம்"

முத்துவின் அப்பா அலுவலக பியூனிடம்:"என்னங்க ஒரு சர்ட்டிபிகேட் வாங்க 2 வாரம் ஆகும்னு சொல்றாங்க"
பியூன்:"என்ன சர்ட்டிபிகேட் வாங்கனும் உங்களுக்கு?"
முத்துவின் அப்பா: "சாதிச் சான்று மற்றும் வருமானச் சான்று"
பியூன்:"நீங்க சட்டப்படி வாங்க நினைச்சா 2 வாரம் ஆகும்.என் கிட்ட 100 ரூபாய் கொடுங்க 2 நாளில் முடிச்சிடலாம்"

- மேற் சொன்ன ஒட்டு மொத்த உரையாடல்களும் நமக்கு தரும் பதில், லஞ்சத்தின் அடிப்படை ஆரம்பம் எங்கே என்ற கேள்விக்கு?

1) ஒரு கிராம நிர்வாக அதிகாரியால்() இவர் இந்த சாதியை சார்ந்தவர் என்று பரிந்துரை செய்யப்பட்ட பின்னர் எதற்கு 15 நாட்கள் தேவைப்படுகிறது-சாதிச் சான்று வழங்க.
2) இவர் இந்த சாதியை சார்ந்தவர் என்று பரிந்துரை செய்ய எதற்கு 50/100 ரூபாய் VAO க்கு தர வேண்டும்.விண்ணப்பித்தவருடைய தேவையின் அவசரமும், எதிர்த்தாலும் துணைக்கு வராத சட்டமும் இருப்பதால் தான் இந்த தவறு எங்கும் நடைபெறுகிறது.மேலும் அந்த VAO தான் இந்த வேலையில் சேருவதற்கு கட்டிய பல லகரங்களை வட்டியுடன் வசூல் செய்ய தூண்டுகிறது.
3)இந்த கணினி உலகத்தில் அனைத்தையும் இலகுவாகவும், விரைவாகவும் பெறத் துடிக்கும் மக்கள் மனநிலையை சரியாக புரிந்து கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தின் நிர்வாகத் திறமை அரசு நிறுவனங்களில் இல்லாமலிருப்பது எப்படி?.
இந்திய தேர்வாணையத்தின் அடிப்படையில் முதல் இடங்களை பிடிக்கும் சிறந்த மாணவர்கள் தான் அரசு அலுவல்களில் பணி புரிகிறார்கள்.அரசு வேலை இல்லாதவர்கள் தான் தனியார் நிறுவனங்களில் சேர்கிறார்கள்.அப்படியிருக்க எந்த ஒரு விஷயம் இரண்டு துறைகளையும் வேறுபடுத்தி காட்டுகிறது.
4) இந்த கால கட்டத்தில் காலம் தாழ்த்துதலே லஞ்சத்தின் ஒரு அடிப்படை காரணமாக இருக்கிறது.மக்களும் தங்கள் அவசரம் கருதி எதையும் தட்டி கேட்காமல் பணிந்து செல்கிறார்கள், அப்படி தட்டி கேட்பவர்கள் அடுத்தவர்களால் ஏளனம் செய்யப் படுகிறார்கள்.
5) அரசு நிறுவனங்களில் வேலை புரிய ஆசைப் படும் நாம் ஏன் ஒரு அரசு பேருந்தில் பயணம் செய்யவோ/அரசு பள்ளிகளில் படிக்க வைக்கவோ/அரசு நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்கவோ விருப்பம் காட்டுவதில்லை.இந்த ஒரு விஷயத்திலேயே நம் ஒவ்வொருவரின் ஆசையும், செயல் திறனும் புரிந்து விடும்.
6) எந்த ஒரு அரசு பணியாளரும் தன் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பது இல்லை.இதிலிருந்தே தெரிந்து விடுகிறது அந்த அதிகாரிக்கு தன் மேல் உள்ள நம்பிக்கை.

ஆமையின் வேகமும் ஊமையின் வார்த்தைகளும் என்றும் அரங்கமேறாது.

Monday, October 3, 2011

வாகை சூட வா - சினிமா விமர்சனம்


வாகை சூட வா - சினிமா விமர்சனம்

கதை: 1960 களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கல்வி அறிவு இல்லா மக்களிடையே கல்வியின் அவசியத்தை உணர்த்தும் நாயகனை பற்றிய கதை.இதில் நாயகனை விரும்பும் நாயகி, முதலாளிகளை தெய்வமாக மதிக்கும் வெள்ளந்தி மக்கள், படிப்பு வாசனையே பிடிக்காமல் வாத்தியாருக்கு டிமிக்கி கொடுத்து செங்கல் சூளையில் வேலை செய்யும் சிறுவர்கள் மற்றும் பல கிராமத்து மக்களின் வாழ்வியலை அழகாக படம் பிடித்து வாகை சூடி இருக்கிறார் இயக்குனர் சற்குணம்.

கதாபாத்திரங்கள்:
விமல்:
இந்த கதாபாத்திரத்திற்கு விமல் முழுவதுமாக பொருந்தா விட்டாலும் இயக்குனரின் நடிகராக எந்த ஒரு ஹீரோயிசமும் இல்லாத நாயகனாக கொடுத்த வேலையை செவ்வனே செய்து இருக்கிறார்.களவாணி அளவுக்கு மனதை களவாட வில்லை.

இனியா:
தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல அறிமுகம்.நாயகனை ஏமாற்றி வியாபாரம் செய்யும் போதும்,ஊருக்கு போகிறார் என்றவுடன் காட்டும் ஏக்கமாகட்டும்,தனக்கு கல்யாணம் நின்று விட்டது என்று சொன்னவுடன் நாயாகன் மகிழ்கிறான் என்று தெரிந்து காட்டும் முக பாவனையாகட்டும் அப்பப்பா....இனியா.. இனி நீயா!!

பாக்யராஜ்:
சில சீன்களே வந்தாலும் கதையின் உயிரோட்டத்திற்கு துணை நிற்கிறார்.

தம்பி ராமைய்யா:
248 என்ற கேரக்டரில் கிராமத்தில் வாழும் சில பந்தா கேரக்டர்களை கண் முன்னே நிறுத்துகிறார்.

பொன்வண்ணன்:
தன்னை கடவுளாக நம்பும் மக்கள் தனக்கு எதிராக செயல்படும்போது அவர்களை ஊரை விட்டே துரத்த முடிவு செய்யும் போதும் மற்றும் இதற்கு காரணமாக இருந்த நாயகனை தீர்த்து கட்ட முடிவு செய்யும் இடத்திலும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

குருவிக்காரர்,வைத்தியர்,செங்கல் சூலையில் வேலை பார்க்கும் சிவகாமி கேரக்டர்,போஸ்ட் உமன் ம்ற்றும் ஊர் சிறுவர்கள் என்று அனைத்து கதாபாத்திரங்களும் ஒரு கிராமத்து வாழ்க்கை நம் கண் முண்ணே நிறுத்துகின்றனர்.

பிளஸ்:
-நல்ல ஒரு சமூக கருத்தை திரையில் சொல்லியதற்கு
-எந்த ஒரு விரசமுமின்றி படமாக்கி இருப்பது
-நாயகன் என்றால் சன்டையிட்டு ஊர் மக்களை காப்பாற்றி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற ஆண்டான்டு கால தமிழ் சினிமாவை பின்பற்றாதது.
-மறந்து போன பல கிராமிய சம்பிரதாயங்களை இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஞாபகப்படுத்தியது.
-கதையின் முக்கியம் கருதி எந்த ஒரு கமெர்சியல் விசயத்தையும் சேர்க்காதது.
-கதைக்கு ஏற்ப அந்த கால விசயங்களை பயன்படுத்தியது.(நீர் இறைக்கும் கவலை,தியேட்டரில் வெள்ளந்தி ரசிகர்,ரேடியோ)

பாரட்டப்பட வேண்டிய மற்ற மூன்று பேர்கள்:
இசை-ஜிப்ரன்:புதுமுக இசையமைப்பாளர் என்ற எண்ணமே வரவில்லை.பிண்ணனி இசையிலும், பாடல்களிலும் புகுந்து விளையாடி இருக்கிறார்."சர சர சாரக்காத்து", "செங்க சூளைக்காரா" ஏற்கனவே ஹிட் லிஸ்டில் வந்து விட்டது.

ஒளிப்பதிவு-ஓம்பிரகாஷ்:பீரியட் படத்திற்குரிய ஃபீலை படம் நெடுக கொண்டு வந்து விடுகிறார்.அதுவும் அந்த குருவிக்காரர் சாகும் சீனில் வைத்த ஷாட் மிக அருமை.

ஆர்ட் டைரக்டர்: ஒரு செங்கல் சூலை கிராமத்தை தத்ரூபமாக நம் கண் முன்னே நிறுத்துகிறார்.இவரது உழைப்புக்கு கண்டிப்பாக ஒரு விருது கிடைக்க வேண்டும்.

நான் ரசித்த காட்சி:
தாம் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்த உடன் சூலையில் வேலை பார்க்கும் ஒரு பெண்மணி தன் மகளின் கையில் உள்ள களிமண்ணை கழுவி விட்டு நேராக நாயகனிடம் கூட்டிச் சென்று "ஏதவது என் பொண்ணுக்கு சொல்லிக் கொடுங்க" என்று சொல்லும் காட்சி.

மைனஸ்:
இந்த மாதிரி படங்களில் குறை இருந்தலும் அதை சொல்ல மனம் ஒப்பவில்லை.
இந்த படத்தில் நான் கண்ட ஒரே குறை, படம் முழுவதும் ஒரே இடத்தில் எடுத்திருப்பதால் ஒரு வித அலுப்பும், மெதுவாக செல்கிறது என்ற எண்ணமும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.லகான் ஹிந்தி படம் பார்த்த போதும் இந்த உணர்வே எனக்கு ஏற்பட்டது.அதில் கிரிக்கெட் என்ற மாயை ஏற்படுத்திய ஈடுபாடு இந்த படத்தில் கல்வி எனும் நிஜம் ஏற்படுத்தாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.

குறைகள் இருந்தாலும் ஒரு நல்ல சமூக கருத்தை முன் நிறுத்தி இருப்பதால் கண்டிப்பாக வாகை சூடி வரவேற்க வேண்டிய ஒரு இயக்குனர் தான் A சற்குனம்.