Thursday, July 31, 2014

முழு பூசணிக்காயை சோத்துல மறைச்ச கதை தெரியுமா?

ஒரு ஊர்ல ஒரு திருடன் இருந்தான். ஒவ்வொரு திருடனும்  ஏதாவது ஒரு பொருள் திருடுறதுல கில்லாடியா இருப்பாங்க. நம்ம ஆள் பூசணிக்காய் திருடுறதுல பலே கில்லாடி. அதனால அவன எல்லாம் பூசணிக்காய் திருடன், பூசணிக்காய் திருடன் அப்படினு கூப்பிடுவாங்க. அப்படியே அவன் வாழ்க்கை முடிஞ்சு போச்சு. அவனுக்கு அப்புறம் வந்த அவனது தலைமுறைகள் திருட்டு  தொழில்ல ஈடுபடாம நல்ல முறையில் சம்பாதித்து பணக்காரர்களாக வாழ்ந்து வந்தார்கள். இருந்தாலும் ஊரில் எல்லோரும் அவர்களை பூசணிக்காய் திருட்டு குடும்பம் என்றே அழைத்து வந்தது. இது அவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கியது. இதனால் மனமுடைந்த அவர்கள் ஒரு சந்நியாசியை அணுகி விவரத்தை எடுத்து சொல்லி, இதிலிருந்து எப்படி நாங்கள் மீள்வது என்று வினவினர். அதற்கு அவர் ஒரு நாள் ஊரில் உள்ள எல்லோரையும் கூட்டி அவர்களுக்கு அன்னதானம் வழங்குங்கள் சரியாகிடும் என்று சொன்னார். அவர்களும் அந்த சந்நியாசி சொன்னது போல் ஊரில் உள்ள எல்லாருக்கும் அன்னதானம் செய்தார்கள்.
அன்று முதல் ஊரில் உள்ள அனைவரும் அந்த குடும்பத்தினரை பூசணிக்காய் திருடன் குடும்பம் சொல்றதுக்கு பதிலாக அன்னதானம் போட்ட குடும்பம் அப்படினு சொல்லி அழைத்தார்களாம்.
இதுதான் முழு பூசணிக்கையை சோத்த போட்டு மறைச்ச கதை.